பதிவு செய்த நாள்
07
மார்
2017
05:03
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் கோவில் கட்டிய விபச்சித்து முனிவருக்கு, விருத்தகிரீஸ்வரர் காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவம் கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினசரி பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, வீதியுலா நடந்தது. ஆறாம் நாள் திருவிழாவான காலை 6:00 மணியளவில் பெரிய நாயகர், பெரிய நாயகி, இளைய நாயகி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பகல் 12:00 மணியளவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விருத்தாம்பிகை, பாலாம்பிகை சமேத விருத்தகிரீஸ்வரர், விபச்சித்து முனிவருக்கு ரிஷப வாகனத்தில் காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. அப்போது, திரண்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மலர் துாவி சுவாமிகளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சுவாமி வீதியுலா நடந்தது.