பதிவு செய்த நாள்
08
மார்
2017
12:03
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடக்கிறது. பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 14ம் தேதி திருவிழா நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த மாதம் 21ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியும், கடந்த 3ம் தேதி வெளி பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி; கிராம சாந்தியும் நடைபெற்றது. கடந்த 4ம் தேதி காலை 10:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெள்ளி தேரோட்ட நிகழ்ச்சி இன்று துவங்குகிறது. விழாவையொட்டி, இன்று அதிகாலை, 6:00 மணிக்கு மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி, காலை, 10:00மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தேவஸ்தானம் சார்பில், அம்மனுக்கு சீர் வரிசைகளும் வழங்கப்படும். பின், இரவு, 7:00 மணிக்கு, 12 அடி உயரமுள்ள மரத்தேரில், விநாயகரும்; 21 அடி உயரமுள்ள வெள்ளி ரதத்தில் மாரியம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் தேர்த் திருவிழாவில், முதல் நாளான இன்று கோவிலிலிருந்து, மார்க்கெட் வீதி வழியாக வந்து வெங்கட்ரமணன் வீதியிலும்; நாளை(9ம்தேதி) இரண்டாம் நாள் தேரோட்டம் துவங்கி, உடுமலை ரோடு வழியாக சத்திரம் வீதியில் தேர்நிலை நிறுத்தப்படும். இறுதி நாளான, 10ம் தேதி மூன்றாம் நாள் தேர்நிலைக்கு வந்து சேருதல், பாரிவேட்டை நிகழ்ச்சியும், தெப்பத்தேர் வைபவம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 11ம் தேதி காலை, 8:30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு, 9:00 மணிக்கு கம்பம் எடுத்தல்; 13ம் தேதி இரவு, 8:00 மணிக்கு மகா அபி ேஷகமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.