பதிவு செய்த நாள்
31
அக்
2011
11:10
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (அக்., 31) மாலை 6 முதல் 6.30 மணிக்குள் சூரசம்ஹாரம் லீலை நடக்கிறது. இக்கோயிலில் அக். 26ல் துவங்கிய கந்த சஷ்டி விழாவின் 5ம்நாளான நேற்று வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிவபெருமாள், கோர்வர்த்தனாம்பிகையுடன், சுப்பிரமணிய சுவாமி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.
வேல் வாங்குதல்: மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு பூஜைகள் நடந்தன. விழா நம்பியார் சிவாச்சார்யாருக்கு பரிவட்டம் கட்டி, கோவர்த்தனாம்பிகை அம்பாள் கரத்தில் இருந்த நவரத்தின வேல் பெறப்பட்டு, நந்தியை வலம் வந்த சுப்பிரமணிய சுவாமி கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டது. சுவாமி பூ சப்பரத்தில் எழுந்தருளி திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று சூரசம்ஹாரம்: உச்சிகால பூஜைக்குபின், சுப்பிரமணிய சுவாமி, சம்ஹார அலங்காரத்திலும், வீரபாகுத்தேவர் வெள்ளை குதிரை வாகனத்திலும், சன்னதி தெருவில் அமைந்த சொக்கநாதர் கோயில் முன் சூரசம்ஹாரம் லீலை நடக்கும். இரவு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடக்கும்.