அழகர்கோவில்: அழகர்கோவில் மலை அடிவாரத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாளையும், அழகர் மலையின் இயற்கை அழகையும், நுாபுரகங்கையில் தீர்த்தமாடவும், முருகனை தரிசிக்கவும் தினமும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். பக்தர்களின் வாகனங்கள் பஸ் ஸ்டாண்ட், தேர் செல்லும் ரோட்டில் நிறுத்தி அங்கிருந்து அரை கி.மீ., துாரம் நடந்து வர வேண்டும். நடக்க முடியாத முதியோர், மாற்றுத்திறனாளிகள் பயன் பெரும் வகையில் பக்தர் ஒருவர் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் பேட்டரி கார் உபயமாக வழங்கினார். சோதனை ஓட்டம் நடந்ததோடு சரி. ஒரு ஆண்டாக கூண்டுக்குள் அடைபட்டு கிடக்கும் பேட்டரி கார் பயன்படுத்தப்படுமா என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பேட்டரி கார் பழுது நீக்கப்பட்டு, டிரைவர் நியமிக்கப்பட்டு நேற்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.