பதிவு செய்த நாள்
19
ஏப்
2017
01:04
திருப்போரூர்: சிதம்பர சுவாமிகள் மடத்தில், ஐந்தாண்டுகளாக மந்த கதியில் நடைபெற்று வரும் திருப்பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும் என,பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்த ஞானியின் மடம், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டில், பல ஆண்டுகளாக கேட்பாரற்று கிடந்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், திருப்பணிகள் செய்ய ஆரம்பிக்கப்பட்டுஇதுவரையில் பணிகள்முடிக்கப்படாமல் உள்ளன. சிதம்பர சுவாமிகளின் சன்னதி, தியான மண்டபம்,அன்னதானக் கூடம், ஆகியவை பணிகள் ஏதும் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது, இந்நிலை, இப்பகுதி வாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.வெளியூர்களில் இருந்து, திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு வருவோர், சிதம்பர சுவாமிகளின் மடம், இங்கு இருப்பதற்கு எந்த விளம்பரமும் இல்லாததால், கந்தசுவாமி பெருமானை மட்டும் தரிசித்து விட்டு,செல்லும் நிலை உள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் இதில் கவனம் செலுத்தி, மடத்தின் திருப்பணிகளை, விரைவில் முடித்து, கும்பாபிஷேகம் விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளின் கோரிக்கையாக உள்ளது.
இப்படி ஒரு மடம், கண்ணகப்பட்டில் இருக்கிறது என்பதே, வெளியூர் வாசிகளுக்கு தெரிவதில்லை, ஏனென்றால், மடத்தைப் பற்றிய விளம்பரம், திருப்போரூரில் எங்கும் இல்லை, முதலில் அதற்கு ஒரு வழி செய்ய வேண்டும். ஜி.பிரபாகரன், திருப்போரூர்
திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கே கேள்விப்பட்டு தான், சிதம்பர சுவாமிகளின் மடத்திற்கு வந்தேன் ஆனால், இங்கு வந்து பார்த்தால், பராமரிப்பு இல்லாமல், திருப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இது, வேதனை அளிக்கிறது. வி.முருகன், சென்னை