விருதுநகர் : விருதுநகர் பாராசக்தி வெயிலுகந்தம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனர்.விருதுநகர் இந்து நாடார் தேவஸ்தானத்திற்கு சொந்தமான பராசக்தி வெயிலுகந்தம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, நவ. 2 ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து நவக்கிரக ஹோமம், துர்கா ஹோமம், கடஸ்தாபனம், யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை 6.45 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பிள்ளையார்பட்டி கே.பிச்சை குருக்கள் நடத்தினார். இரவில் அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏற்பாடுகளை இந்து நாடார் தேவஸ்தான நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.