அழகர்கோவில்:அழகர்கோவில் நிர்வாகம் சார்பில் இயக்கப்படும் பஸ் மற்றும் நூபுர கங்கை நுழைவு கட்டண டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள், சோலைமலை முருகனை தரிசிக்கவும், நூபுரகங்கை தீர்த்தத்தில் நீராடவும் தினமும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். பெருமாளை தரிசித்த பின் மலை மீதுள்ள முருகனை தரிசிக்க கோயில் நிர்வாகம் மூலம் இயக்கப்படும் பஸ்சில் பக்தர்கள் செல்கின்றனர்.
பஸ்சில் செல்ல தலா 10 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. குடும்பத்துடன் சென்றால், ஒரே டிக்கெட்டில் எண்ணிக்கையை எழுதிகொடுத்து மொத்த தொகையையும் வசூலிக்கின்றனர். ஆனால், கோயில் நிர்வாகத்திடம் கணக்கு காண்பிக்கும்போது ஒருவர் மட்டும் எனக்கூறி முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். சில பணியாளர்கள் தொடர்ந்து இந்த முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
அதுபோல் மலை மீது உள்ள நூபுரகங்கை தீர்த்தத்தில் குளிக்க 15 ரூபாய் கட்டணம். இங்கேயும் ஒருவர் மட்டும் என்றுக்கூறி பணியாளர்களில் சிலர் கொள்ளை அடிக்கின்றனர். இதனால் நிர்வாகத்திற்கு தினமும் பல ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
கோயில் கண்காணிப்பிற்கு உள்துறை, அலுவலகம், வெளி நிர்வாக பணிகள் என 3 கண்காணிப்பாளர்கள் உள்ளனர். இந்த வசூல் கொள்ளையை வெளி நிர்வாகப் பணிகளுக்கான கண்காணிப்பாளர் தான் விசாரிக்க வேண்டும். ஆனால் அவர் கண்டு கொள்ளாததால் இதுபோன்ற முறைகேடுகள் நடக்கின்றன. நிர்வாக அதிகாரி மாரிமுத்து அவ்வப்போது டிக்கெட்டுகளை பரிசோதித்து முறைகேட்டில் ஈடுபடும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.நிர்வாக அதிகாரி கூறுகையில், பணியாளர்கள் மீதான புகார் உறுதிசெய்யப்பட்டால் கடும் தண்டனை விதிப்பதோடு, பல மடங்கு அபராதம் விதிக்கப்படும், என்றார்.