பதிவு செய்த நாள்
04
மே
2017
12:05
மாமல்லபுரம் : மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் நேற்று கோலாகலமாக துவங்கியது. இக்கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, மூலவரிடம் அருளாசி பெற்று, நில வழிபாடு, வாஸ்து ஹோமம் நடந்தது. சுவாமியின் சேனை முதல்வர் விஷ்வக்சேனர், கொடிக்கயிற்றுடன் வீதியுலா சென்றார். துவக்க நாளான நேற்று காலை, தின வழிபாட்டை தொடர்ந்து, ஸ்தலசயன பெருமாள், தேவியருடன், மஹா மண்டபத்தில் எழுந்தருளி, வழிபாடு நடந்தது. 5:30 மணிக்கு, கொடியேற்றப்பட்டு, நவசந்தி ஆவாஹணம் முடிந்து, சுவாமி, தேவியருடன், வீதியுலா சென்றார். மாலை, கும்ப ஆவாஹணம், யாகசாலை ஹோமம் என நடைபெற்று, சுவாமி, கிருஷ்ண திருக்கோலத்தில் காட்சியளித்தார். பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். தினமும் காலை, இரவு என, 12ம் தேதி வரை, வெவ்வேறு உற்சவம் நடைபெறும்.