பதிவு செய்த நாள்
14
நவ
2011
10:11
திருத்தணி:திருத்தணி முருகன் மலைக் கோவிலில் நேற்று, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால், மூலவரை தரிசிக்க, 3 மணி நேரம் காத்திருந்தனர். திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, முருகப் பெருமானை தரிசித்துச் செல்கின்றனர். நேற்று திருமண முகூர்த்த நாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக் கோவிலில் குவிந்தனர்.இதனால், அதிகாலை 6 மணி முதல், இரவு 9 மணி வரை பக்தர்கள் பொது வழி தரிசனத்தில், 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சில பக்தர்கள் விரைவு தரிசனம் செய்ய, 100 ரூபாய் 50 ரூபாய் மற்றும் 25 ரூபாய் சிறப்பு டிக்கெட் பெற்று, ஒரு மணி நேரத்தில் மூலவரை தரிசித்தனர்.மூலவர் முருகப் பெருமானுக்கு அதிகாலை 5 மணிக்கு பால், பன்னீர், தேன், விபூதி மற்றும் அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தங்க கிரீடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.