பதிவு செய்த நாள்
14
நவ
2011
11:11
ஈரோடு: ஈரோட்டில் நேற்று நடந்த ஸ்ரீனிவாஸ திருக்கல்யாணத்தை பல்வேறு பகுதியிலிருந்து வந்த பக்தர்கள் பொறுமையுடன் காத்திருந்து தரிசித்தனர். ஐந்தாண்டுக்குப் பின் திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஸ்ரீ வாரி சேவா டிரஸ்ட், திருப்பதி தர்ம பிரச்சார பரிஷத் சார்பில் நேற்று ஈரோடு வ.உ.சி., மைதானத்தில் ஸ்ரீனிவாஸ திருக்கல்யாணம் நேற்று நடந்தது. அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டது. சிறப்பு அனுமதியாக வி.வி.ஐ.பி., வி.ஐ.பி., என இரு வகை பாஸ் மட்டும் வழங்கப்பட்டது. இவர்களுக்கு முன்புறம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, அருகிலுள்ள கரூர், திருப்பூர், சேலம் ஆகிய பகுதிகளிலிருந்து பெண்கள், குழந்தைகளோடு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்தனர். மாலை 3 மணிக்கே பக்தர்கள் வ.உ.சி., மைதானத்துக்கு வரத் துவங்கினர். மாலை 4.30 மணிக்கெல்லாம் மைதானம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது. மாலை 4 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்குமென அறிவிக்கப்பட்டது. 6 மணியளவில் தான் மேடை திரை திறக்கப்பட்டு, திருக்கல்யாண நிகழ்ச்சிகள் துவங்கி, இரவு 8 மணி வரை நடந்தது. அதுவரை பக்தர்கள் பொறுமையுடனும், ஆர்வமுடன் காத்திருந்து, திருக்கல்யாணத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் கண்டு பக்தி பரவசத்துடன் தரிசித்தனர். பக்தர்கள் மட்டுமின்றி பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸாரும் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். மைதானத்துக்குள் நுழைந்த போதே பக்தர்கள் அனைவருக்கும் திருப்பதி சுவையில் தயாரான லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. கூட்டத்தில் பாக்கெட் தண்ணீரும் வினியோகிக்கப்பட்டது. கார்களை நிறுத்த தனியே கார் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டிருந்தது. பக்தி பரவசத்துடன் விழா நிறைவடைந்தது. திருக்கல்யாணம் குறித்து செய்தி சேகரிக்க செல்ல ஏற்பாட்டாளர்கள் சார்பில், பாஸ் வழங்கப்பட்டிருந்தது. இந்த பாஸ்களை நேரடியாக சம்பந்தப்பட்ட பத்திரிகை அலுவலகத்துக்கு வழங்கவில்லை. இதை சந்தர்ப்பமாக்கி, சில பத்திரிகையாளர்களே ஒவ்வொரு பத்திரிகை பெயரிலும் ஏராளமான பாஸ்களை வாங்கி, விற்று காசு பார்த்துவிட்டனர். பத்திரிகை நிருபர், ஃபோட்டோகிராஃபர்கள் பலர் பாஸ் இன்றி போலீஸாரிடம் மன்றாடி செய்தி சேகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.