பதிவு செய்த நாள்
07
ஜூன்
2017
04:06
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால்குட திருவிழா நடந்தது. கோயிலில் விசாக திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை 4.30 மணிக்கு ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானை, மூலவர் கரத்தில் உள்ள தங்க வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. காலை ஆறு மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானை விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினர்.
திருப்பரங்குன்றம், மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக தலையில் சுமந்துவந்த குடங்களில் இருந்த பால் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு பிற்பகல் 2 மணிவரை அபிஷேகம் செய்யப்பட்டது. கட்டளை அபிஷேகம் முடிந்து சுவாமி சேர்த்தி சென்றார். பக்தர்கள் பால், இளநீர், பன்னீர், மயில், புஷ்பம், பறவை காவடிகள் எடுத்து வந்தனர். ஏராளமானோர் முகங்களில் 12 அடி வேலால் அலகு குத்தியும், ஏராளமானோர் முதுகில் அலகு குத்தி தேர் இழுத்து வந்தும் சுவாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். பலர் 16கால் மண்டபம் அருகே பூக்குழி இறங்கினர். காலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சன்னதி தெருவிலுள்ள மண்டபத்தில் எழுந்தருளினார்.