பதிவு செய்த நாள்
08
ஜூன்
2017
10:06
திருத்தணி: கருட வாகனத்தில் விஜயராகவ பெருமாள், நேற்று, வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி, நந்தி ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ளது. கோட்ட ஆறுமுகசுவாமி கோவில். இக்கோவில் வளாகத்தில், விஜயராகவபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று, திருத்தணி நகர மளிகை கடை வியாபாரிகள் சங்கம், விஜயராகவ பெருமாள் சுவாமி கருட சேவை விழா குழு மற்றும் திருத்தணி நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவை இணைந்து கருடசேவை விழா நடத்தியது. விழாவையொட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு, கருட வாகனத்தில் உற்சவர் விஜயராகவ பெருமாள் எழுந்தருளி, திருத்தணி நகர முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம், 1,500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு, ம.பொ.சி., சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவில், உற்சவர் விஜயராகவ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பெருமாள், மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு கோவில் வளாகத்தை அடைந்தார்.