பதிவு செய்த நாள்
15
நவ
2011
11:11
தென்காசி : பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் வரும் 17ம் தேதி மாதாந்திர முழுக்காப்பு வழிபாடு நடக்கிறது.பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் கடந்த 42 ஆண்டுகளாக தமிழ் மாத முதல் நாளன்று மாதாந்திர முழுக்காப்பு வழிபாடு நடந்து வருகிறது. வரும் 17ம் தேதி கார்த்திகை மாத முதல் நாளை முன்னிட்டு மாதாந்திர முழுக்காப்பு வழிபாடு நடக்கிறது. அன்று காலையில் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், மதியம் ருத்ர ஏகாதி ஹோமம், பூர்ணதி நடக்கிறது.சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமாக எண்ணெய் காப்பு சாத்தப்படுகிறது. பின்னர் மா பொடி, மஞ்சள் பொடி, திரவியம், 108 லிட்டர் பால், பஞ்சாமிர்தம், தேன், தயிர், இளநீர், விபூதி, அன்னாபிஷேகம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் மகாபிஷேகம் நடக்கிறது. மாலையில் கோயில் முழுவதும் நெய் விளக்கு தீபம் ஏற்றப்படுகிறது. இரவு சுவாமி உற்சவருக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. இதன் பின்னர் சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளலும், சுவாமிக்கு ஏகாந்த பூஜையும், கபால பைரவருக்கு சிறப்பு பூஜை வழிபாடும் நடக்கிறது.காலை முதல் இரவு வரை பக்தர்களுக்கு முழுக்காப்பு அடியார்களால் சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி, ஆடிட்டர் கிருஷ்ணசாமி, மாதாந்திர முழுக்காப்பு அடியார்கள் செய்து வருகின்றனர்.