அவலுார்பேட்டை: கெங்கபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. மேல்மலையனுார் தாலுகா கெங்கபுரம் கிராமத்திலுள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா 5 ம்தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது.தினசரி இரவில் அம்ச வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று காலையில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. திருத்தேரை ஆரணி தொகுதி எம்.பி., ஏழுமலை வடம் பிடித்து துவக்கி வைத்தார். மாடவீதி வழியாக பொதுமக்கள் ஊர்வலமாக தேரை இழுத்து வந்தனர். நிகழ்ச்சியில், கோவில் ஆய்வாளர் அன்பழகன், எம்.ஜி.ஆர்.,இளைஞரணி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வழக்கறிஞர் எவான்ஸ், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் உமாராஜேந்திரன், தமிழரசிதமிழ்வாணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மோகன் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.