பதிவு செய்த நாள்
16
நவ
2011
11:11
திருவனந்தபுரம்: பத்மநாப சுவாமி கோவிலில் நடத்தப்பட்ட தேவ பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகளின் படி, பரிகார பூஜைகள் அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் துவங்கும்.கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் பிரசித்திப் பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் பாதாள அறைகளில், பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள அரிய பொக்கிஷங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதை மதிப்பீடு செய்ய சுப்ரீம் கோர்ட் ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்தது. இந்நிலையில், கோவிலில் பாதாள அறைகளை திறந்து பொக்கிஷங்களை மதிப்பீடு செய்வது குறித்து, கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் சார்பில் தேவ பிரசன்னம் (சுவாமி கருத்து கேட்டல்) நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து சில பரிகாரங்கள் கோவிலில் நடத்தப்பட்டது. மேலும், பல பரிகார பூஜைகள் நடத்தப்படவேண்டும்.இந்நிலையில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் பரிகார பூஜைகள் துவங்கும் என தெரிகிறது. மொத்தம் 12 நாட்கள் நடைபெற உள்ள பூஜைகளில், 48 கணபதி ஹோமம், 36 திரிகால பூஜை, 144 சுதர்சன ஹோமம், ஏழு மகாமிருத்யுஞ்ச ஹோமம், 288 சுகிர்த ஹோமம்,1,000 திலஹோமம், 14 சக்ராப்ஜ பூஜை, 12 சாயுஜ்ய பூஜை, 108 பேருக்கு பாத பூஜை, மூன்று திரவிய கலச பூஜை ஆகியவை இந்நாட்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.