பதிவு செய்த நாள்
15
ஜூலை
2017
01:07
ஆத்துார்: நாவக்குறிச்சி பெருமாள் கோயில் கட்டுமான பணியின்போது, நிலவறை சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட, ஒன்பது ஐம்பொன் சிலைகளை ஆய்வு செய்யும்படி, மத்திய தொல்லியல் துறைக்கு, தாசில்தார் பரிந்துரை செய்துள்ளார்.சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த, நாவக்குறிச்சி கிராமத்தில், பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத நயினபூர்ண நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில், பள்ளம் தோண்டினர். அப்போது, நிலவரை சுரங்கத்தினுள், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, விஷ்ணு, லட்சுமி, பத்மாவதி தாயார், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார் மற்றும் திருமங்கை மன்னர் ஆழ்வார் என, மொத்தம், ஒன்பது ஐம்பொன் உலோக சிலைகள் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டன.அவற்றை ஆய்வு செய்து, அதன் வரலாறு, சிலை மதிப்புகளை அறிக்கையாக வழங்கும்படி, மத்திய தொல்லியல் துறைக்கு, வருவாய் துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.
இது குறித்து, ஆத்துார் தாசில்தார் கேசவன் கூறியதாவது:நாவக்குறிச்சி நாராயண பெருமாள் கோயில் வளாக நிலவறை சுரங்கத்தில், மொத்தம், 144.25 கிலோ எடை கொண்ட ஒன்பது உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்து, அறிக்கையாக வழங்கும்படி, மத்திய தொல்லியல் துறைக்கு பரிந்துரை செய்துள்ளோம்.ஓரிரு நாளில் ஆய்வு செய்ய அதிகாரிகள் வருவர், என்றார்.