பதிவு செய்த நாள்
05
ஆக
2017
03:08
பந்தலூர்: நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள, மாரியம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர், கோத்தகிரி உட்பட பல்வேறு பகுதிகளிலும், உள்ள அம்மன் கோவில்களில், வரலட்சுமி விரதம்; ஆடிவெள்ளி சிறப்பு பூஜைகள் நடந்தன.
இதில், ஊட்டி மாரியம்மன் கோவில், காந்தல் மூலகரசியம்மன் கோவில், காசி விஸ்வநாத சுவாமி கோவில்; குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில்; காளியம்மன் கோவில், சவுடேஸ்வரியம்மன் கோவில்; துர்க்கை அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பந்தலூர் முத்தூர்பிள்ளை மாரியம்மன் கோவில், அத்திக்குன்னா மாரியம்மன் கோவில், நெல்லியாளம் டான்டீ, பந்தலூர் பஜார், அய்யன்கொல்லி மாரியம்மன் கோவில், பொன்னானி, குந்தலாடி மாரியம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
சிறப்பம்சமாக, பந்தலூரில் உள்ள பல வீடுகளிலும் பக்தர்கள் அம்மன் உருவம் அமைத்து, கடந்த மூன்று நாட்களாக வரலட்சுமி விரதம் இருந்து, பூஜை செய்ததுடன் சுமங்கலிகளுக்கு சிறப்பு பிரசாதம், மஞ்சள் கயிறு, குங்குமம், துணி உள்ளிட்டவற்றை வழங்கினர்.
கூடலூரில் உள்ள, மேல்கூடலூர் மாரியம்மன் கோவிலில் நடந்த ஆடிவெள்ளி; வரலட்சுமி விரதம்; சுமங்கலி பூஜைகளில், இப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல், எல்லையோர கேரள மக்களும் பங்கேற்றனர். காலை, 6:00 மணிக்கு துவக்கப்பட்ட சிறப்பு பூஜையின் போது, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், நடந்த சுமங்கலி பூஜையின் போது, சுமங்கலி பிரசாத பொருள்களை, தங்களது முந்தானையில் பெண் பக்தர்கள் பெற்று கொண்டனர்.