பதிவு செய்த நாள்
05
ஆக
2017
03:08
கிருஷ்ணராயபுரம்: மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி கோவிலில், ஆடிப்பெருக்கு விழா முன்னிட்டு, கோவிந்தா... கோவிந்தா... கோஷங்கள் முழங்க, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நேர்த்திக் கடன் செலுத்தும் விநோத வழிபாடு நடந்தது.
கிருஷ்ணராயபுரம் தாலுகா, மகாதானபுரம் பஞ்சாயத்து, மேட்டு மகாதானபுரம் அருகில் மிகவும் பழைமையான மகாலட்சுமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி, 18 பெருக்கு விழாவை முன்னிட்டு, அடுத்து வரும் நாளில் மகாலட்சுமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். இந்நிலையில், ஆடி, 19வது நாள் என்பதால், கோவில் வளாகத்தில் நெய் விளக்கு ஏற்றப்பட்டு, கருடன் வட்டமிட்ட பின், கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன், ஏழு பேருக்கு சக்தி தேங்காய் தலையில் உடைக்கபட்டது. அதன்பின், கோவில் வளாகத்தில் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள், வரிசையாக அமர வைக்கப்பட்டு, ஒவ்வொரு பக்தர்களுக்கும் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. இதில், 536 பக்தர்கள் தலையில் தேங்காயை உடைத்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சி, உடுமலை, கோவை, திருப்பூர், சேலம், திண்டுக்கல், திருச்சி, கரூர் போன்ற நகரங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தலையில் தேங்காய் உடைத்த போது, சிறுசிறு காயமடைந்த பக்தர்களுக்கு, கோவில் வளாகத்தில் சிறப்பு மருத்துவ ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.