பதிவு செய்த நாள்
05
ஆக
2017
03:08
வத்திராயிருப்பு: வரலட்சுமி விரத வழிபாட்டை முன்னிட்டு வத்திராயிருப்பு மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவிக்க வளைகாப்பும் நடத்தப்பட்டது.
வத்திராயிருப்பு பலகுடி கீழத்தெரு மாரியம்மன் கோயிலில் வரலட்சுமி விரத வழிபாடு கொண்டாடப்பட்டது.
இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. 10 ஆயிரம் வளையல்களை கொண்டு அம்மனுக்கு கிரீடத்துடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோயில் முழுவதும் வளையல்களால் பந்தலும் அமைக்கப்பட்டது.
கர்ப்பிணிகள், திருமணமாகி குழந்தையில்லாத பெண்கள், திருமணமாகாத பெண்கள் அனைவரும் கோயிலுக்கு முன்பாக அமரவைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் சுமங்கலி பெண்களை அழைத்து அம்மனுக்கு படைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட வளையல்களை எடுத்து முதலில் நிறைமாத கர்ப்பிணிகளுக்கும், பின்னர் திருமணமாகி குழந்தை இல்லாத பெண்களுக்கும் அணிவிக்கப்பட்டது. அவர்களது முகத்தில் சந்தனம் பூசப்பட்டு குழந்தை வேண்டியும், கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் வேண்டியும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அன்னதானத்துடன், பெண்களுக்கு வளையல் தானமும் நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மகளிர் விழாக்கமிட்டி தலைவி திருப்பதி, நிர்வாகிகள் தனலட்சுமி, செல்வி, மரியம்மாள், அனிதா, ராணி, சுப்புலட்சுமி, ராதிகா செய்தனர்.