திருவாடானை, திருவாடானை, திருவெற்றியூர் கோயில்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும். திருவாடானையில் பிரசித்தி பெற்ற ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில்கள் உள்ளன. சித்திரை மற்றும் ஆடிமாதங்களில் நடைபெறும் திருவிழாக்களிலும், பிரதோஷ நாட்களிலும் அதிகமான பக்தர்கள் கூடுவார்கள். இக் கோயில்களில் திருட்டுக்களை கண்டுபிடிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டது. வெளிபிரகாரங்களில் மட்டும் 3 கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. உட் பிரகாரம் மற்றும் சுவாமி வீதி உலா செல்லும் பகுதிகளில் கேமராக்கள் வைக்கவில்லை. இது குறித்து திருவெற்றியூரை சேர்ந்த மூர்த்தி கூறியதாவது: திருவெற்றியூரில் உள்ள கேமரா அடிக்கடி பழுதாகிறது. சில நாட்களுக்கு முன்பு சிவகங்கையை சேர்ந்த ஒரு பெண்ணின் கழுத்திலிருந்த தங்க தாயத்து திருடுபோனது. கண்காணிப்பு கேமராவை பார்த்த போது இருட்டாக இருந்ததே தவிர முகங்கள் சரியாக தெரியவில்லை. அப் பெண் போலீசில் புகார் செய்யாமல் சென்று விட்டார். ஆகவே கூடுதலாக கேமராக்கள் வைக்கவும், அக் கேமராக்கள் தரமானதாக இருக்கவும் தேவஸ்தான நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.