பதிவு செய்த நாள்
12
ஆக
2017
12:08
ஈரோடு: ஆடி கடைசி வெள்ளியை ஒட்டி, அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆடி கடைசி வெள்ளியான நேற்று, ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் வாரணாம்பிகை அம்மன் சன்னிதானத்தில், விளக்கு பூஜை நடந்தது. பெரியமாரியம்மன் கோவில், சின்னமாரியம்மன், நடுமாரியம்மன் கோவில் வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில், சூரம்பட்டி வலசு மாரியம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. சூளை, அங்காள பரமேஸ்வரி அம்மன், நாகேஸ்வரி அலங்காரத்திலும், அசோகபுரம் முத்துமாரியம்மன், அம்ச வாகினி அலங்காரத்திலும், கருங்கல்பாளையம் தேவி கருமாரியம்மன், துர்க்கையலங்காரத்திலும், சத்தி ரோடு எல்லை மாரியம்மன், மஞ்சள் அலங்காரத்திலும், ஈ.பி.பி., நகர் சக்தி மாரியம்மன் குருத்தோலை அலங்காரத்திலும் அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கோவில்களில் குவிந்தனர். இதனால் கோவில்கள் களை கட்டின.
* கோபி சாராதா மாரியம்மன் கோவிலில், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்தில், அம்மன் காட்சி தந்தார்.
* பவானி சங்கமேஸ்வரர் கோவில், வேதநாயகி அம்மனுக்கு, 1,008 பால்குட அபிஷேகம், லலிதா சகஸ்ர நாம யாகம் மற்றும் திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.