பதிவு செய்த நாள்
04
செப்
2017
12:09
சென்னை : அஷ்டலட்சுமி கோவிலில் பவித்ர உற்சவத்தை முன்னிட்டு, யாக குண்டங்கள் அமைத்து, ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. இறைவனின் சக்தி மூலம் விளையும் பலன்களை, பக்தர்களுக்கு அதிகரித்து கொடுக்க வேண்டும் என்பதற்காக சடங்குகள், சம்பிரதாயங்கள் அடிப்படையில் பவித்ர உற்சவம் நடத்தப்படுகிறது. பெசன்ட் நகரில் அமைந்துள்ள அஷ்டலட்சுமி கோவிலில், பவித்ர உற்சவத்தை முன்னிட்டு, செப்., 1ம் தேதி முதல் யாக குண்டங்கள் அமைத்து, முளைப்பாலிகையிட்டு, பட்டு நுால் சார்த்தப்பட்டது. இதற்காக, தெற்கு திசையில், பிரத்யும்னன் எனும் அரைவட்ட வடிவ குண்டம்; மேற்கில், அனிருத்தன் எனும் வட்ட வடிவ குண்டம்; வடக்கில், சங்கர்ஷணம் எனும் முக்கோண வடிவ குண்டம்; கிழக்கில், வாசுதேவன் எனும் சதுர வடிவ குண்டம் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றை, நவபத்ம மண்டலம் எனும் யந்திரத்தை சுற்றி அமைத்துள்ளனர். அக்னி மூலையில், மகா கும்ப ஸ்தாபனம், 10 கும்பங்களுடனும், ஈசான மூலையில், சோம கும்ப ஸ்தாபனம், 10 கும்பங்களுடனும் அமைக்கப்பட்டுள்ளன. அதில், பாஞ்சராத்திர ஆகம ஜெயாக்கிய பிரவின் விதிப்படி, ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. செப்., 6ம் தேதி மாலை, மகா பூர்ணாஹுதியுடன் பவித்ரோத்சவம் நிறைவு பெறுகிறது.