பதிவு செய்த நாள்
05
செப்
2017
03:09
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் வாழும் கேரள மக்கள், ஓணம் பண்டிகைக்கு அத்தப்பூ கோலமிட்டு, நண்பர்கள், உறவினர்களுக்கு அடப்பிரதம் பாயாசம் பரிமாறி கோலாகலமாக கொண்டாடினர். கேரளா மாநிலத்தில், ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. ஓணம் பண்டிகையையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், பொள்ளாச்சியில் வாழும் கேரளா மக்கள் பலரும் குடும்பத்துடன் கேரளாவிற்கு சென்றனர். பொள்ளாச்சியில் கேரளா மக்கள் வசிக்கும் பகுதிகளில், அத்தப்பூ கோலமிட்டு, புத்தாடை அணிந்து பண்டிகையை கொண்டாடினர். அடப்பிரதம் பாயாசம் தயாரித்து, உறவினர்கள், நண்பர்களுக்கு பரிமாறி கோலாகலமாக கொண்டாடினர். ஓணம் சிறப்பு வழிபாட்டில் வீடுகளில், செம்மண்ணால் மாவேலி சிலை வடிவமைத்து, மலர்களால் அலங்காரம் செய்து, படையல் வைத்து வழிபட்டனர். பொள்ளாச்சி, ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், திருவோணத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவையொட்டி, ஒன்பது வகையான அபிஷேகம், ஒன்பது வகை மலர்களால் அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.