பதிவு செய்த நாள்
21
செப்
2017
01:09
திருவனந்தபுரம்: நவம்பர் மாதம் தொடங்க உள்ள சபரிமலை மண்டல, மகரவிளக்கு காலத்தில் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் அக்டோபர் இறுதிக்குள் முடிக்கப்படும், என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.இது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரம் தலைமை செயலக தர்பார்ஹாலில் நடைபெற்றது, இதில் அமைச்சர்கள் கட்கம்பள்ளி சுரேந்திரன், சந்திரசேகரன், தாமஸ் சாண்டி, சுதாகரன், சைலஜா டீச்சர், ராஜூமேத்யூ, தாமஸ், தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன், உறுப்பினர்கள் அஜய், ராகவன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு தலைமை வகித்து முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: மண்டல, மகரவிளக்கு காலத்தில் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் அனைத்தும் அக்டோபர் இறுதிக்குள் முடிக்க வேண்டும். அனைத்து துறைகளுக்கும் தேவையான நிதி அக்., 15ம் தேதிக்குள் அனுமதிக்கப்படும். கடந்த ஆண்டுகளை விட கூடுதல் பணம் வேண்டும் துறையினர் ் செயலாளர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளிசுரேந்திரன் கூறியதாவது: சபரிமலை செல்லும் பாதையில் ரூ. 145 கோடி செலவில் 37 பக்தர்கள் ஓய்வெடுக்கும் இடைத்தாவளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் மீண்டும் முதல்வர் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெறும். சபரிமலை செல்லும் ரோடுகள் அனைத்தும் அடுத்த மாதம் இறுதிக்குள் சீரமைக்கப்பட்டு விடும். பம்பை முதல் சபரிமலை வரை 157 குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு 379 குழாய்களில் தண்ணீர் வழங்கப்படும். இந்த ஆண்டு சுடுநீரும் கிடைக்கும். 400 கேரள அரசு பஸ்கள் சர்வீஸ் நடத்தும். இவ்வாறு அவர் கூறினார். டிஜிபி லோக்நாத் பெஹ்ரா கூறுகையில், இந்தாண்டு கடந்த ஆண்டுகளை விட 12 சதவீதம் வரை கூடுதல் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.