பதிவு செய்த நாள்
21
செப்
2017
03:09
சென்னை: திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சென்னை பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன், திருப்பதி திருக்குடை ஊர்வலம் துவங்கியது.
திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு, தமிழகத்தில் இருந்து, ஆண்டுதோறும், இரண்டு மங்கள பொருட்கள் சமர்ப்பிக்கப்படும். ஒன்று, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மலர்மாலை, மற்றொன்று, 150 ஆண்டுகளாக, சென்னையில் இருந்து பாரம்பரியமான திருக்குடை சமர்ப்பித்தல்.
திருப்பதி கருட சேவை முன்னிட்டு, தமிழக மக்கள் சார்பில், இந்தாண்டு, ஹிந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில், 11 வெண்பட்டுத் திருக்குடைகள், சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பிக்கப்படுகின்றன. சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து, இன்று(செப்., 21ல்)காலை, 10:00 மணிக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருக்குடை ஊர்வலம் துவங்கியது. இதனை முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி துவக்கி வைத்தார். உடன் நிர்வாக அறங்காவலர் வேதாந்தி, அறங்காவலர் கோபால்ஜி. அலையேனத் திரன்ட பக்தர்களின் கோவித்தா கோஷங்களுடன் புறப்பட்டது. இந்த ஊர்வலம், என்.எஸ்.சி.போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக, மாலை, 4:00 மணிக்கு, யானை கவுனி தாண்டுகிறது. செப்., 26ல் திருமலை சென்றடைகிறது.