ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி மடத்துவிளை புனித சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு கப்பல் சப்பர பவனி நடந்தது. ஆறுமுகநேரி மடத்துவிளை புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு தினமும் காலை பாடற்திருப்பலியும், மாலை ஜெபமாலை, நற்கருணை ஆசீர் நிகழ்ச்சியும் நடந்தது. கடந்த 2ம் தேதி மாலை திருவிழா மாலை ஆராதனை நடந்தது. ஆராதனையை பங்கு தந்தையர்கள் சேவியர், ஆரோக்கியதாஸ் ஆகியோர் நடத்தினர். திருவிழா தினமான 3ம் தேதி காலை திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. இதில் சிறுவர், சிறுமியர்கள் புதுநன்மை பெறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தூத்துக்குடி மறைமாவட்ட குரு சேவியர், துறைமுக பங்கு தந்தை அமலதாஸ், குரும்பூர் பங்கு தந்தை ஆரோக்கியதாஸ், ஆறுமுகநேரி பங்கு தந்தை இருதயராஜ் அடிகளார் ஆகியோர் திருப்பலியை நடத்தினர்.அன்றையதினம் மாலை புனித சவேரியாரின் திருஉருவ சப்பர பவனி அலங்கரிக்கப்பட்ட கப்பலில் வைக்கப்பட்டு முக்கிய வீதி வழியாக புனித அன்னம்மாள் ஆலயம் வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மெயின் பஜார் வழியாக சவேரியார் ஆலயம் வந்தடைந்தது. ஏற்பாடுகளை பங்கு தந்தையர்கள் ரூபர்ட் அருள்வளன், இருதயராஜ், ஊர்கமிட்டி தலைவர் அமிர்தம் ஆகியோர் செய்திருந்தனர்.