குமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோயில்:மூலஸ்தான கோபுர விமான பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2017 12:10
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கட்டப்பட்டு வரும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலின் மூலஸ்தான கோபுர விமான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் கடற்கரையை ஒட்டி திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்டப்பட்டு வருகிறது. 22.50 கோடி ரூபாய் செலவில் ஐந்தரை ஏக்கர் நிலத்தில் இந்த பணி நடைபெற்று வருகிறது. திருப்பதி கோயில் வடிவில் அப்படியே கட்டப்பட்டு வருகிறது. 2013 ஜூன் மாதம் தொடங்கிய இந்த பணி தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. திருப்பதி பிரம்மோற்சவம் நாளில் இங்குள்ள மூலஸ்தானத்தில் சூரிய ஒளி விழும் வகையில் கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது மூலஸ்தான விமான கோபுர பணி நடைபெற்று வருகிறது. பணிகள் அனைத்தும் 2018 ஜனவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடல்காற்றால் அரிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில், முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான கற்கள் அனைத்தும், திருச்சி மாவட்டம், நாகலாபுரத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது.