பதிவு செய்த நாள்
11
அக்
2017
11:10
சேலம்: தேச ஒற்றுமையை வலியுறுத்தி, தீபாவளி நாளில், ராமேஸ்வரம் கோவில் வளாகத்தில், சிறப்பு பூஜை நடத்துவதற்காக, காசியில் தயாரான, 9 டன் பஞ்ச முக சிவன், 10 டன் நந்தீஸ்வரர் சிலைகள், லாரி மூலம் எடுத்துச் செல்லப்பட்டன. தேச ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், கர்நாடக மாநிலம், குல்பர்க்கா இறை அருள் கட்டளையின் சார்பில், காசியில், 9 டன் எடை, 18 மீட்டர் உயரத்தில், பஞ்சமுக சிவன் சிலை வடிவமைக்கப்பட்டது. மேலும், 10 டன் எடையில், 5 மீட்டர் உயரத்தில், நந்தீஸ்வரர் சிலையும் அமைக்கப்பட்டது. இந்த சிலைகளுக்கு, ஆக., 14ல் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, கோவில் போல் வடிவமைக்கப்பட்ட லாரியில் வைக்கப்பட்டு, ஆக., 15ல் பயணத்தை துவங்கியது. காசியில் துவங்கிய பயணம், வடமாநிலங்கள், கர்நாடகாவின் முக்கிய நகரங்களில், பொதுமக்களின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது. நேற்று காலை, சேலம் வந்த இந்த சிலைகளுக்கு, திருவாக்கவுண்டனுார் பைபாசில் பூஜை நடத்தப்பட்டது. இரண்டு மணி நேரம் பொதுமக்களின் தரிசனத்துக்கு பின், ராமேஸ்வரம் பயணமானது. தீபாவளியன்று, ராமநாத சுவாமி கோவிலில், சிறப்பு பூஜைகளுக்கு பின், சிலைகள் குல்பர்க்கா எடுத்து செல்லப்படுகின்றன.