பதிவு செய்த நாள்
11
அக்
2017
11:10
மதுரை: ‘‘கலப்படம், கெமிக்கலால் தயாராகும் பூஜை பொருட்களை தடை செய்ய தாக்கலான வழக்கில், ‘கோயில்களில் கலப்படத்துடன் நெய் தீபம் என்ற பெயரில் விற்க, வேதிப் பொருட்களால் உருவாக்கிய கற்பூரம், பிளாஸ்டிக் பைகளில் பூஜை பொருட்கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது,’ என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
சிவகங்கை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் ஆனந்தவேல் தாக்கல் செய்த பொதுநல மனு: கோயில்களில் கற்பூரம், சாம்பிராணியில் போலி கெமிக்கல் கலந்துள்ளன. இதனால் சுற்றுச்சூழல், உடல்நலம் பாதிக்கிறது. வனஸ்பதி, கலப்பட எண்ணெய், விலங்குகளின் கொழுப்பு கலந்த எண்ணெயை நெய் தீபம் என்ற பெயரில் விற்கின்றனர். போலிசந்தனம், குங்குமத்தால் தெய்வ சிலைகள், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அனைத்து கோயில்களையும் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மண்டலமாக அரசு அறிவிக்க இடைக்கால உத்தரவிட வேண்டும். கலப்படத்தால் தயாரிக்கப்பட்ட நெய்தீப பொருட்கள், கற்பூரம், சாம்பிராணி, பத்தி விற்பனையை கோயில்களில் தடை செய்ய வேண்டும். இவ்வாறு ஆனந்தவேல் மனு செய்திருந்தார். நீதிபதிகள் எம்.வேணுகோபால், அப்துல் குத்துாஸ் அமர்வு விசாரித்தது. அரசு வழக்கறிஞர்: கோயில்களில் கலப்பட எண்ணெயுடன் நெய் தீபம் என்ற பெயரில் விற்க, வேதிப் பொருட்களால் உருவாக்கப்பட்ட கற்பூரம், பிளாஸ்டிக் பைகளில் பூஜை பொருட்கள் விற்க தடை விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நெய் தீபத்திற்கு தேவையான அகல் விளக்கு, திரி, நெய் டெண்டர் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, கோயில் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. நெய் தீபம் விளக்கு ஒப்பந்ததாரர் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கோயில் மூலம் நெய் தீபம் விற்பனை செய்யும் போது, எண்ணெய் உறிஞ்சும் தாள் வழங்கவும், அதை பயன் படுத்திய பின் போட குப்பைத் தொட்டி ஏற்பாடு செய்ய வேண்டும். கோயில்களில் கற்பூரம் ஏற்றுதல் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்தல் தொடர்பாக ஏற்கனவே, அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி செயல்படுத்தாத கோயில் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார் என்றார். நீதிபதிகள், ‘தமிழக சுகாதாரத்துறை செயலாளர், அறநிலையத்துறை கமிஷனர் நவ.,7 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்,’ என்றனர்.