பதிவு செய்த நாள்
11
அக்
2017
12:10
லக்னோ: உ.பி.,யில், ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், அயோத்தியில், 328 அடி உயர, பிரமாண்ட ராமர் சிலையை நிறுவ, அம்மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். அயோத்தியில், சரயு நதிக்கரையில், ராமருக்கு, 328 அடி உயர, பிரமாண்ட சிலையை நிறுவி, ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்த, முதல்வர் ஆதித்யநாத் திட்டமிட்டு உள்ளார். இந்த சிலை, சர்ச்சைக்குரிய, ராமஜென்ம பூமி - பாபர் மசூதி இடத்துக்கு அருகில் நிறுவப்பட உள்ளது.உ.பி., மாநில, சுற்றுலா தலங்கள் பட்டியலில், உலக புகழ்பெற்ற, தாஜ்மஹால் நீக்கப்பட்டு உள்ளதால் எழுந்த சர்ச்சை அடங்கும் முன், சர்ச்சைக்குரிய இடம் அருகே, ராமர் சிலையை நிறுவ, உ.பி., அரசு திட்டமிட்டு உள்ளது. ராமர் சிலை நிறுவும் திட்டம், மாநில கவர்னர், ராம் நாயக்கின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது; இருப்பினும், பசுமை தீர்ப்பாயத்திடம், தடையில்லா சான்றிதழ் இன்னும் பெறப்படவில்லை. இதற்கிடையே, தீபாவளியை ஒட்டி, சரயு நதிக்கரையில், ஆயிரக்கணக்கான தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி நடக்க உள்ளது; முதல்வர் ஆதித்யநாத், அயோத்தி நகர வீதிகளில், பிரமாண்ட ஊர்வலம் செல்லவும் திட்டமிட்டு உள்ளார்.