பதிவு செய்த நாள்
11
அக்
2017
01:10
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இப்பகுதி மக்கள் மழைவேண்டி புரட்டாசி மாதம் அம்மனுக்கு விழா எடுத்து வழிபடுவது வழக்கம். ஒருவாரம் நடைபெறும் இவ்விழா கலைவிழாவுடன் துவங்கும். இயல், இசை, நாடகம் என முத்தமிழும் சங்கமிக்கும் வகையில் விழா நடைபெறும். இதில் ஜாதி, மத பேதமின்றி அனைத்து மதங்களை சேர்ந்த மக்களும் கலந்து கொள்வார்கள். ஜாதி, சமய ஒருமைப்பாட்டிற்கு உதாரணமாக இவ்விழாவின் இறுதிநாளில் தேரோட்டம் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு திருவிழா செப்.4 ல் துவங்கியது. இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு ஜாதி, மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதை தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு, நடனம், இன்னிசை கச்சேரி என பலவகையான கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மங்கள இசையுடன் கலைநிகழ்ச்சிகள் முடிவடைந்தன. இன்று அதிகாலை முத்தாலம்மன் தேரில் எழுந்தருள வீதியுலா நடக்க உள்ளது.ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் சுந்தர்ராஜன், முத்தாலம்மன் பக்தசபா செயலாளர் விவேகானந்தன், தலைவர் சுந்தர்ராஜப்பெருமாள் செய்துள்ளனர்.