பதிவு செய்த நாள்
08
டிச
2011
11:12
திருவண்ணாலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கொண்டாடப்படும் கார்த்திதை தீப திருவிழாவில் இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது, அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதனை முன்னிட்டு திருவண்ணாமலை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதனை முன்னிட்டு 8ஆம் தேதி அதிகாலை 2மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விநாயகர், முருகர் சமேத வள்ளி தெய்வாணை, அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் அதிகாலை காலை 4மணி அளவில் அண்ணாமலையார் மூல கருவறையில் கற்பூர தீபமேற்றி, சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் ஓத, வேதமந்திரங்கள் முழங்க அந்த கற்பூர தீபத்திலிருந்து ஒரு மடக்கில் நெய்த்திரியிட்ட விளக்கு ஏற்றப்பட்டு பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் ஐந்து மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் ஸ்ரீராஜா குருக்கள் பரணி தீபத்தை கையிலேந்தி கோயில் முதல் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு இந்த பரணி தீபத்தை கொண்டு, சிவ- சக்தி மூர்த்தங்களிலிருந்து விரிவானதே எல்லா மூர்த்திகளும் என்பதனை காட்டுவதற்காக, அம்மன் கோயில் கருவறையில் ஐந்து அகல் விளக்குகள் ஏற்றப்பபட்டன. பின்னர் கோயிலில் உள்ள விநாயகர் சந்நதி உள்ளிட்ட அனைத்து சந்நதிகளிலும் தீபங்கள் ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செங்கோட்டையன், கோகில இந்திரா, செல்லூர் ராஜூ, பரஞ்சோதி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். பரணி தீபம் ஏற்றப்படுவதை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர். பின்னர் மாலை 6 மணிக்கு அனேகன் ஏகன் என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் மஹாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வாணை சமேத முருகர், அண்ணாமலையார் சமேத உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தங்க கொடி மரத்தின் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தபின் பின்பு தீப தரிசன மண்டபத்தில் ஒன்றாக அமர்வர். அப்போது சரியாக 5.59 மணி அளவில் அர்த்தநாரிஸ்வரர் தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளி நடனமாடி காட்சியளிப்பார். அப்போது காலையில் சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்ட ஐந்து அகல் விளக்குகளையும் உடன் கொண்டு வந்து கொடி மரத்தின் முன்பாக உள்ள அகண்டத்தில் ஒன்று சேர்ப்பர்.பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் விதத்தில் 5 தீப்பந்தகள் ஏற்றப்பட்டு அவைகளை கொண்டு 2ஆயிரத்து 668 அடி மலை உயரத்தில் உள்ளவர்களுக்கு தெரியும் படி காண்பிக்கப்படும், அப்போது மஹா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
அர்த்தநாரிஸ்வரர் ஆண்டில் ஒரு முறை மட்டுமே மஹாதீபத்தன்று மட்டுமே கோயில் கொடி மரம் அருகே பலி பீடத்தின் அருகே வந்து காட்சி தந்துவிட்டு செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், கோயில் முதல் பிரகாரம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கண்கொள்ள காட்சியாக உள்ளன. நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.பாதுகாப்பு பணியில் ஐ.ஜி., சைலேந்திரபாபு தலைமையில் 4 டி.ஐ.ஜிக்கள், 16 எஸ்.பி.,க்கள் உள்ளிட்ட 10ஆயிரம் போலீஸார், 5ஆயிரம் தன்னார்வ தொண்டு அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். இரண்டாயிரம் சிறப்பு பஸ்கள் பல்வேறு பகுதியிலிருந்து இயக்கப்படுகின்றன. 7 மற்றும் 8ஆம் தேதிகளில் இரண்டு சிறப்பு ரயில்கள் சென்னை மற்றும் பாண்டிச்சேரியிலிருந்து இயக்கப்படுகின்றன. வெளிப்புற பகுதியிலிருந்து வரும் பேருந்துகள் நிறுத்துவதற்கு நகரின் எல்லைப்பகுதியில் 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.பக்தர்களுக்கு வசதியாக கிரிவலப்பாதை மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் 20 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.