பதிவு செய்த நாள்
17
அக்
2017
12:10
திருப்புத்துார்: தீபாவளி என்றாலே புத்தாடை,பலகாரம் அடுத்து வெடிகள் தான் நினைவிற்கு வரும். ஆனால் திருப்புத்துாரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள கொள்ளுகுடிப்பட்டி கிராம மக்களுக்கு பறவைகள் பாசத்தால் வெடிகள்,மேள தாளங்கள் நினைவிற்கு வருவதில்லை. சிவகங்கை மாவட்டம்,வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் உள்ள இக்கிராமத்தின் கண்மாயில் தான் பறவைகள் அதிகமாக தங்கி, இனவிருத்தி செய்து பெருகிச் செல்கின்றன. கொள்ளுகுடிப்பட்டி கண்மாயிலுள்ள நாட்டுக்கருவை மரக்கிளைகளில் கூடு கட்டும் பறவைகள், தங்கள் குஞ்சுகள் வளர்ந்து பறந்து செல்லும் வரை இங்கு தங்குகின்றன.
இந்திய மற்றும் வெளிநாட்டு பறவைகள் ஆயிரக்கணக்கான கி.மீ., துாரத்திலிருந்து வருகின்றன. கொக்கு,நாரை,வாத்து வகைகளை சேர்ந்த செங்கால் நாரை,நத்தை கொத்தி நாரை, சாம்பல் நாரை, நைட் ெஹரான், வெள்ளை மற்றும் கருப்பு அரிவாள் மூக்கன், ஸ்பாட் பில் வாத்து, சிறு விசில் வாத்து, நாமக்கோழி வாத்து, முக்குளிப்பான், பாம்புத்தாரா, நீர்க்காகம், லிட்டில் ஈகரெட், கேட்டில் ஈகரெட், லிட்டில் கார்மரெண்ட் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த பறவைகளை இங்கு பார்க்கலாம்.
கடந்த 2009,20-10ல் அதிகபட்சமாக சுமார் 22 ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் வந்தன. வெளிநாட்டிலிருந்து வரும் இந்த பறவைகளை வைத்து, மழைபெய்யும் நிலையை இக்கிராமத்தினர் அறிந்து கொள்கின்றனர். அதற்கேற்ப விவசாயப் பணிகளை மேற்கொள்கின்றனர். கண்மாய் மரங்களில் கூடு கட்டியுள்ள பறவைகளின் எச்சம், கண்மாய் நீரில் கலப்பதால், உரம் நிறைந்த பாசன வசதி கிராமத்தினருக்கு கிடைக்கிறது. இதனால் கூடுதல் மகசூல் கிடைக்கிறது. இதற்கு நன்றிக் கடனாக இந்த கிராமத்தினர் வெடி,மேள தாளம் சப்தம் ஒலிக்காமல் பார்த்துக்கொள்கின்றனர்.இதனால் மரக்கிளைகளில் கூட்டில் உள்ள பறவைக் குஞ்சுகள் அதிர்ச்சியடையாமல் பாதுகாப்பாக இருக்க உதவுகின்றனர்.
கிராம இளைஞர் எஸ்.திருப்புகழ் கூறியதாவது: சிறுவயது முதலே நான் வெடி வெடித்ததில்லை. பறவைகளுக்காக வெடிக்காமல் இருப்பது மனதிருப்தியாக இருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து எங்களைத் தேடி வரும் பறவைகளை பாதுகாக்கும் பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. பறவைகளை பார்ப்பதற்காக பல ஊர்களிலிருந்து எங்கள் கிராமத்திற்கு பலரும் வருவது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, என்றார்.
செல்வி கூறியதாவது: வெடிச்சத்தம் கேட்டு பயத்தால் பறவைகளின் குஞ்சுகள் கண்மாய் நீரில் விழுந்து விடுவதைப் பார்த்த எங்கள் முன்னோர்கள் செய்த ஏற்பாடுதான் வெடி வெடிக்காமல் இருப்பது. அதைப் பாரம்பரியமாக நாங்கள் தொடர்கிறோம். அதனால் எங்களுக்கு மனதிருப்தி கிடைக்கிறது என்கிறார். பறவைகளின் மீதான அன்பால், வெடிக்காத இக்கிராமத்தினரை பாராட்டி, தீபாவளி பரிசாக வனத்துறையினர் சுவீட் பாக்ஸ் வழங்குவதும் தொடர்கிறது.