பதிவு செய்த நாள்
17
அக்
2017
12:10
பெற்றோர்க்கும், சகோதர சகோதரிகளுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், சமுதாயத்திற்கும், தேசத்திற்கும், உலகிற்கும், முடிவில் பிரபஞ்சத்திற்கும் நன்றி கூற கடமைப்பட்டவன் மனிதன். இந்த தீபஒளித் திருநாளில் இருந்து நன்றியுணர்வுடன் எல்லா செயல்களையும் மேற்கொள்ளுங்கள் என்று திருப்பூர் மாவட்டம் திருமூர்த்திமலையில் அமைந்துள்ள உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் மகரிஷி பரஞ்ஜோதியார் வெளியிட்டுள்ள தீபாவளி திருநாள் வாழ்த்தில் கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: அங்குஇங்கு எனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் எல்லாம் வல்ல பரிபூரணத்திலுள்ள பரம்பொருளான பரஞ்ஜோதியின், பேரருளின் பெரும்கருணையினால் தீப ஒளித் திருநாளில் நீங்கள் அனைவரும் எல்லா நலங்களும், வளங்களும் பெற்று என்றும் நிறைவுடன், மகிழ்வுடன் நிறைவாழ்வு வாழ பரிபூரண நல்லாசிகள்.
பண்டிகைகள் எதற்காக?
பண்டிகைகள் நம்மை முறைப்படுத்தவும், நெறிப்படுத்தவும், கொண்டாடப்படுகின்றன. பண்டிகைகள் பல உண்மைகளையும், தெளிவுகளையும், தத்துவங்களையும் நமக்கு அள்ளித் தருகின்றன. நாம் முறையான, நெறியான வாழ்க்கையை வாழ வழிவகை காட்டுகின்றது பண்டிகைகள். பண்டிகைகள் கொண்டாடப்படுவதற்காக கூறப்படும் காரணங்களையும், பண்டிகைகள் எப்படி கொண்டாட வேண்டும் என்ற நியதிகளை சற்று கூர்ந்து நோக்கினாலே அவை நமக்கு என்ன உணர்த்துகின்றன என்பதை நன்கு உணர முடியும். எந்த சூழ்நிலையிலும் நன்றி உணர்ச்சியை மனிதன் மறந்து விடக் கூடாது. தன்னை பெற்ற பெற்றோர்க்கும், சகோதர சகோதரிகளுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், சமுதாயத்திற்கும், தேசத்திற்கும், உலகிற்கும், முடிவில் பிரபஞ்சத்திற்கும் நன்றி கூற கடமைப்பட்டவன் மனிதன். இந்த தீபஒளித் திருநாளில் இருந்து நன்றியுணர்வுடன் எல்லா செயல்களையும் மேற்கொள்ளுங்கள்.
தாய்நாட்டுக்கு நன்றி கூறுங்கள்: உங்களுக்கு எல்லாவற்றையும் அளித்து, உங்களை எல்லா நிலைகளிலும் உயர்த்தி, உங்களை அரவணைத்து காத்து வரும் தாய்த்திருநாட்டை வாழ்த்துங்கள். உங்களது எண்ணம், சொல், செயல் இவையனைத்தையும் தாய்த்திருநாட்டின் வளர்ச்சிக்கு அர்ப்பணியுங்கள். உங்களை காத்து வரும் தாய்த்திரு நாட்டை என்றும் நன்றியுடன் வாழ்த்துங்கள். உங்களது உயர்வு தாய்த்திருநாட்டின் உயர்வு. தாய்த்திருநாட்டை உலக அரங்கில் முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்த தீபஒளித் திருநாள் விளங்க பரிபூரண நல்லாசிகள். உங்களின் கண்கண்ட தெய்வமாகிய பெற்றோரைப் பேணிக் காப்பது போல் சமுதாயத்தையும், தேசத்தையும், உலகத்தையும், பிரபஞ்சத்தையும், பேணி பாதுகாக்க பரிபூரண நல்லாசிகள். தீபத்தை ஏற்றி புறத்தில் உள்ள இருளை நீக்குவது போல, அகத்தில் உள்ள தேவையில்லாவற்றை நீக்கி நீங்கள் என்றும் சுயம் பிரகாசாத்துடன் எல்லா நிலைகளிலும் சிறப்பு பெற பரிபூரண நல்லாசிகள்.
தீபஒளி ஏற்றுவோம் ! மனத்தூய்மை பெறுவோம் !
அன்னைபூமி நீடூழி வாழ்க!
சந்தோஷம்!