பதிவு செய்த நாள்
19
அக்
2017
10:10
திருப்பூர்: தமிழகத்தை பொறுத்த வரை, நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டாலும், திருப்பூரில் இன்று இரண்டாவது நாளாக தீபாவளி கொண்டாட்டம் தொடரும். வட மாநிலங்களை பொறுத்தவரை தீபாவளி பண்டிகை இரண்டு நாள் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், இன்று வடமாநிலங்களில் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். திருப்பூரில், வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். வியாபாரம், பனியன் உற்பத்தி தொழில் நிறுவனங்கள், பல்வேறு வர்த்தகங்களிலும் ஈடுபட்டுள்ளனர். இது தவிர கடைகள், தொழிற்சாலைகளில் வேலை தேடி வந்து, வடமாநிலத்தினர் என ஏறத்தாழ மூன்று லட்சம் பேர் வரை வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் இன்று தீபாவளி கொண்டாடுகின்றனர். கடந்த ஒரு வாரமாக தீபாவளி விற்பனையில் பரபரப்பாக இயங்கிய பல கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் பண்டிகை கொண்டாட ஏதுவாக நேற்று விடுமுறை விட்டிருந்தன. இருப்பினும், நேற்று கடை வீதிகளில் பரபரப்பாக விற்பனை நடந்தது. எனவே, திருப்பூரில் இன்று இரண்டாவது நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.