பதிவு செய்த நாள்
30
அக்
2017
01:10
தஞ்சாவூர்: தஞ்சாவூர் புகழ்பெற்ற பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் 1032வது ஆண்டு சதய விழாவினை முன்னிட்டு,இரண்டாம் நாளான இன்று 48 வகையான பொருள்கள் கொண்டு பேரபிஷேகம் மற்றும் ராஜராஜ உருவ சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சி நடந்தது.
தஞ்சை பெரியகோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின், 1032 வது சதய விழா, நேற்று துவங்கியது. உலகப் புகழ் பெற்று விளங்கும், தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய ராஜராஜ சோழன் பிறந்த நாளை, அவருடைய நட்சத்திர நாளான சதய தினத்தில், சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. சதய விழா இரண்டாம் நாளான நேற்று காலை 8.00 மணிக்கு திருவேற்காடு கருமாரி பட்டர் அய்யப்ப சுவாமி தலைமையில், திருமுறை வீதிஉலாவுடன், யானை மீது தேவாரம் - திருவாசகத்தை வைத்து ஊர்வலமாக ராஜராஜன் சிலை வரை எடுத்து செல்லப்பட்டு, அங்கு சோழன் சிலைக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, கலெக்டர் அண்ணாதுரை, பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, ஆகியோர்கள் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியதை செய்தனர். பிறகு, ராஜராஜன் உருவசிலைக்கு பல்வேறு அமைப்பினர்,பொதுமக்கள் என பலரும் மாலை அணிவித்தனர்.
தொடர்ந்து காலை 9.00 மணிக்கு பிரகதீஸ்வரருக்கு கிரைவகை, தேன், தயிர்,மஞ்சள்,பால்,பழ வகை ஆகிய 48 வகையான பொருகளை கொண்டு பேரபிஷேகம் செய்யப்பட்டன. அபிஷேகத்தை காண பல்வேறு பகுதியில், இருந்த வந்த சுற்றுலாபயணிகள்,சிவயடியார்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர். மதியம் பெருதீப வழிபாடும், மாலை தேவாரம், திருமுறை இசை அரங்கம், இன்னிசை பாட்டுமன்றம் போன்றவையும், வெள்ளி விஷப வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற்றது. இரவு பரதநாட்டிய நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெற்றன.
ராஜராஜ சோழன் நினைவு இடத்தில் மரியாதை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள பழையாறையில் அரண்மனைக்கு அருகில் உள்ள ஓடத்தோப்பில் சமாதி அமைக்கப்பட்டதாகவும் அவர் சிவதீட்சை பெற்றவர் என்பதால் அவரது சமாதி அமைந்த இடத்தில் அவரது மகன் ராஜேந்திர சோழனால், மிகப்பெரியலிங்கம் வைக்கப்பட்டு நினைவுக்கோயில் அமைக்கப்பட்டது. சதயவிழாவான நேற்று, அப்பகுதியை சேர்ந்த ஆன்மீகவாதிகளும், பொதுமக்களும் சமாதி மீது அமைந்துள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகங்கள் செய்தும், மலர் மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் பூஜைகள் செய்து வழிப்பட்டனர்.