பதிவு செய்த நாள்
31
அக்
2017
11:10
தஞ்சாவூர்: தஞ்சாவூரில், ராஜராஜசோழன், 1,032வது ஆண்டு சதய விழாவை முன்னிட்டு, 48 வகையான பொருட்களால், பிரகதீஸ்வரருக்கு பேராபிஷேகம் நடந்தது. தஞ்சையில், ராஜராஜசோழனின், 1,032வது சதய விழா, நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று காலை, 8:00 மணிக்கு, திருமுறை வீதி உலாவுடன், யானை மீது, தேவாரம் திருவாசகத்தை வைத்து, ஊர்வலமாக ராஜராஜன் சிலை வரை எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு சோழன் சிலைக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு, பிரகதீஸ்வரருக்கு தேன், தயிர், மஞ்சள், பால், பழம் ஆகிய, 48 வகையான பொருட்களால், பேராபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேகத்தை காண, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணியர், சிவனடியார்கள் திரண்டு இருந்தனர். கும்பகோணம் அடுத்த, உடையாளூரில் உள்ளதாக கூறப்படும் ராஜராஜசோழனின் நினைவிடத்தில், 1,032வது சதய விழா, நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமானோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.