பதிவு செய்த நாள்
08
நவ
2017
12:11
விழுப்புரம் : வளவனுார் அருகே, புதரில் கிடந்த நடராஜர் சிலையை, வருவாய் துறை அதிகாரிகள் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், வளவனுார் அடுத்த கணக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கண்டப்பன். இவர் நேற்று முன்தினம், தன் வீட்டின் அருகே, காலி மனையில் முட்புதர்களை அகற்றினார். அப்போது, முட்புதரில், நடராஜர் சிலை ஒன்று கிடந்தது.தகவலறிந்த வளவனுார் வருவாய் ஆய்வாளர் அமுதா, வி.ஏ.ஓ., ஜெயந்தி ஆகியோர் சென்று, சிலையை மீட்டு, விழுப்புரம் தாசில்தார் சுந்தர்ராஜனிடம் ஒப்படைத்தனர்.நேற்று காலை 11:00 மணிக்கு, மாவட்ட கருவூலத்தில் சிலை ஒப்படைக்கப்பட்டது. முட்புதரில் கண்டெடுக்கப்பட்ட, இச்சிலை 150 ஆண்டு பழமையானதாக, ஐம்பொன் சிலையாக இருக்கலாம் என வருவாய் அதிகாரிகள் தெரிவித்தனர். சிலை குறித்து வருவாய் துறை அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.