பதிவு செய்த நாள்
16
நவ
2017
06:11
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரிக்கு காவிரியில் தண்ணீர் இல்லாததால் புஷ்கரத்தின் போது அமைக்கப்பட்ட நீர்த்தேக்கத்தில் போர்வெல் நீர் நிரப்பப்பட்டு கடைமுக தீர்த்தவாரி விழா நடைபெற்றது.
சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவியார் சாபவிமோசனம் பெற மயில் உருவம் கொண்டு பூஜித்த இடம் மயிலாடுதுறை. சிவபெருமானும் மயில் உருகொண்டு இருவரும் ஆ னந்த நடனம் மாயூர தாண்டவம் ஆடினர். பின்னர் சிவமயில் தேவி மயிலை நோக்கி பிரம்மா ஸ்தாபித்த இந்த பிர்மதீர்த்தத்தில் மூழ்கி சிவலிங்கத்தை பூஜிப்பாயாக என்று அசரீரி கூறிய து. அதைக் கேட்ட பார்வதி தேவி மனமகிழ்ச்சியுடன் பிர்ம்ம தீர்த்தத்தில் மூழ்கியெழுந்து மயில் உரு நீங்கி, தேவியாக சுய உருப்பெற்றார். சிவமயிலும் சிவபிரானாக மாறி என்ன வரம் வேண்டும் தேவி என்றார். அப்போது அம்மை கவுரியாகிய நான் மயில் உருக்கொண்டு பூஜித்ததால் கவுரிமாயூரம் என்ற பெயர் இந்த ஊருக்கு வரவேண்டும். நீங்களும் மாயூரநாதர் என்று அழைக்கப்பட வேண்டும். நான் உங்களை வழிபட்ட இந்த துலா மாதத்தில் இங்கு வந்து நீராடுபவர்களுக்கு பாவங்களைபோக்கி அருள்பாலிக்க வேண்டும் என்றார் என்பது ஐதீகம்.
இதனை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் சுவாமி தீர்த்தம் கொடுக்கும் நகிழ்ச்சி நடைபெறும். அதேபோல் இவ்வாண்டு கடந்த அக்டோபர் 18ம் தேதி துலா உற்சவ தொடக்க தீர்த்தவாரியும். 19ம் தேதி அமாவாசை தீர்த்தவாரியும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் கடைசி பத்துநாள் உற்சவ ம் தொடங்கி 13ம் தேதி திருக்கல்யாணமும், 15ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அதனைமுன்னிட்டு திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி. அறம்வளர்த்தநாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி, தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர்,விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் ஆகிய சுவாமிகள் காவிரியின் இருகரைகளிலும் எழுந்தருளினர். தெற்குகரையில் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பண்டாரசந்நிதி முன்னிலையிலும், வடக்கு கரையில் தருமபுரம் ஆதீனம் இளையசந்நிதானம் மாசிலாமணிதேசிக ஞானசம்பந்தர் சுவாமிகள் முன்னி லையிலும் காவிரி துலாக் கட்டத்தில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று மதியம் சுவாமி தீர்த்தம் கொடுக்க பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். இதில் திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை விசாரணை அம்பலவாண தம்பிரான், சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள், சப்– கலெக்டர் பிரியங்கா பங்கஜம், சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.