பதிவு செய்த நாள்
21
நவ
2017
12:11
திருப்போரூர் : திருப்போரூர் கோவிலுக்கு காணிக்கையாக கிடைக்கும் வெள்ளி, பல நுாறு கிலோக்களை எட்டியுள்ளதால், கந்தபெருமானுக்கு வெள்ளித்தேர் ஏற்படுத்த, அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரில் விண்ணில் போர் புரிந்து, தாருகன் என்ற அசுரனின், ஆணவத்தை அழித்த கோவிலாக, கந்தசுவாமி கோவில் விளங்குகிறது. அறுபடை வீட்டிற்கு நிகராக போற்றப்படும் இக்கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம், வைகாசி விசாகம், குரு பூஜை, மகத்தான காவடிகளுடன் மாசி விழா மற்றும் மாதம்தோறும் கிருத்திகை விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மேலும், மழைநீர் வருவதற்கு ஏற்ப தனி கட்டமைப்புடன் கூடிய சரவணப் பொய்கை குளம், இதுவரை தண்ணீர் இன்றி வற்றியது கிடையாது என்ற பெருமை கொண்டதாக விளங்குகிறது.
காஞ்சி, சென்னை, திருவள்ளூர் மற்றும் வட மாவட்ட மக்களின் பிரதான பிரார்த்தனை தலமாக இக்கோவில் விளங்குவதால் பக்தர்களின் உண்டியல் காணிக்கை, துலாபாரம், முடி காணிக்கை, அபிஷேகங்கள், அர்ச்சனைகள், நில வாடகை, நிலவைப்பு வட்டி என ஆண்டுக்கு, ஐந்து கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் கோவிலாகவும் இக்கோவில் விளங்குகிறது. இங்கு, 50 ஆண்டுகளாக பயன்பாடற்றிருந்த மரத்தேர், 2005ம் ஆண்டு அப்போதைய முதல்வரான ஜெயலலிதாவின் உத்தரவு படி, உடனடியாக செப்பனிடப்பட்டு, 2006ம் ஆண்டு தேரோட்டம் நடந்தது. கடந்த, 2010ல், அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆட்சியில், ஒரு கோடி மதிப்பில் கோவில் தங்க நகைகள் மூலம் தங்கத்தேர் உருவாக்கப்பட்டு, 2011ம் ஆண்டு துவங்கி பக்தர்கள் விருப்ப நாளில் தேரோட்டம் நடைபெறுகிறது. தற்போது, கோவிலில் மாதம்தோறும் உண்டியல் எண்ணுதல் மற்றும் விசேஷ பிரார்த்தனை காணிக்கை மூலம், பல நுாறு கிலோ எடை வெள்ளி சேர்ந்துள்ளது. திருப்போரூர், கந்தசுவாமி கோவில் நிர்வாகம் பக்தர்கள் தங்கும் கூடம், திருமண மண்டபம் என, அடிப்டை வசதிகளை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில், காலை நேரத்தில் பக்தர்கள் பிரார்த்தனை ரதம் இழுக்கும் விதத்தில் வெள்ளித்தேர் ஏற்படுத்த, அறநிலையத்துறை நிர்வாகமும், ஆட்சியாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்களும், ஆன்மிக அன்பர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.