பதிவு செய்த நாள்
21
நவ
2017
12:11
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை, சித்திரைசாவடி சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், பழமையான கட்டடங்களில் இயங்கி வந்த, ஒன்பது கடைகள் இடித்து அகற்றப்பட்டன. சேலம், செவ்வாய்ப்பேட்டை, சித்திரைசாவடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஒன்பது கடைகள் பழமையான கட்டடத்தில் இயங்கி வந்தன. இந்த கட்டடங்கள், எந்நேரம் வேண்டுமானாலும், இடிந்து விழும் நிலையில் இருந்ததால், அவற்றை பயன்படுத்த அதிகாரிகள் தடை விதித்தனர். கடைகளை பயன்படுத்தியவர்கள், காலி செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்ப்பேட்டையில் உள்ள மூட்டை தூக்கும் தொழிலாளர்கள், லாரி டிரைவர்கள், பொதுமக்கள் கடைகளில் பகல், இரவு நேரங்களில் படுத்து தூங்கி வந்தனர். உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், கடைகளை அகற்ற, இந்து சமய அறநிலையத்துறைக்கு கோவில் நிர்வாக அலுவலர் அழகுலிங்கேஸ்வரி கடிதம் எழுதி இருந்தார். அதன்படி, பழமையான கட்டடங்களை அகற்ற, சேலம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் வரதராஜன் உத்தரவு பிறப்பித்தார். நேற்று காலை, போலீஸ் பாதுகாப்புடன், நிர்வாக அலுவலர் அழகுலிங்கேஸ்வரி, இந்து சமய அறநிலையத்துறை உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலையில், தீயணைப்புத்துறை, மின்வாரியம், வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில், ஒன்பது கடைகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. விரைவில், புதிய கடைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.