பதிவு செய்த நாள்
25
நவ
2017
01:11
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே புதுப்புதுாரில் உள்ள பட்டத்தரசி அம்மன், கன்னிமூல கணபதி, பாலமுருகன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் அருகே, கூடலுார் பேரூராட்சிக்குட்பட்ட புதுப்புதுாரில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு, சாஸ்திர முறைப்படி கட்டப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் விநாயகர், பாலமுருகன் கோவில்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவில்களின் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் விநாயகர் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து கோபுரகலசம் வைத்தல், தீபாராதனை, தீர்த்தம், முளைப்பாரி அழைத்து வருதல், 108 மூலிகை பொருட்களுடன் ேஹாமம் ஆகியன நடந்தன. நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, கலசம் புறப்பாடு நடந்தது. காலை, 6:00 மணிக்கு விமான கோபுர கலசம், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிேஷகம் நடந்தன. தொடர்ந்து மகா அபிேஷகம், சிறப்பு அலங்காரம், தசதரிசனம், பிரசாதம் வழங்குதல் நடந்தன. விழாவில், வாராகி மணிகண்ட சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.