பதிவு செய்த நாள்
30
நவ
2017
11:11
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை திருவிழா ஆறாம் நாளான நேற்று சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நிகழ்ச்சி நடந்தது.
வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகை அம்பாள், தங்க மயில் வாகனத்தில் சுவாமி, தெய்வானை, மற்றொரு வெள்ளி ரிஷப வாகனத்தில் சத்தியகிரீஸ்வரர், பிரியாவிடை, பல்லக்கில் சீவிலிநாயகர், திருஞான சம்பந்தர் 16 கால் மண்டபம் முன்பு எழுந்தருளினர். அங்கு சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை முடிந்து, புராண கதையை பக்தர்களுக்கு கோயில் ஓதுவார் கூறினார். இன்று (நவ.,30) காலை கங்காளநாதர் சுவாமி, காமதேனு வாகனத்தில் சுவாமி, தெய்வானை, பல்லக்கில் நடராஜமூர்த்தி, சிவகாமி அம்பாள் புறப்பாடும், இரவு ரத்ன சிம்மாசனத்தில் சுவாமி, தெய்வானை புறப்பாடும் நடக்கிறது. மகா தீபம் எட்டாம் நாள் திரு விழாவாக டிச., 1 இரவு 7:00 மணி, கோயில் திருவாட்சி மண்டபம் ஆறுகால் பீடத்தில் சுவாமிக்கு பட்டாபிஷேகமும், டிச., 2 காலையில் சிறிய வைர தேரோட்டமும், மாலை 6:15 மணிக்கு மலைமேல் மகா தீபமும், டிச.,3ல் தீர்த்த உற்ஸவமும் நடக்கிறது.