பதிவு செய்த நாள்
30
நவ
2017
12:11
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, சென்னையில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியும், விளக்குகள் விற்பனையும் ஜரூராக நடந்து வருகிறது. கார்த்திகை மாத பவுர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் இணைந்த நாளில் தமிழர்கள் இல்லங்களிலும், கோவில்களிலும் தீபங்களை ஏற்றி, மகிழ்ச்சியாகக் கொண்டாடும் விழா, தீபத் திருநாள். கார்த்திகை தீபம் அன்று மாலை வேளையில், வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவர். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு தீப திருநாள் டிச., 2ல் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, தமிழகத்தில் மண்பாண்ட தொழிலாளர்களால், பாரம்பரிய அகல் விளக்குகள் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு வந்துள்ளது.
இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை தீபத்திற்கு ஒரு மாதம் முன்பே, அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு விடுவோம். அந்த ஒரு மாதம், வேறு எந்த பொருட்களும் தயாரிப்பதில்லை. தினமும் ஆயிரக்கணக்கான ஒரு முகம், ஐந்து முகம் அகல்விளக்குகள் தயாரித்து, காயவைத்து, சுட்டு, விற்பனைக்கு அனுப்புவோம். ஒரு அகல் விளக்கு, இரண்டு ரூபாய் முதல், ஐந்து ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது இல்லாமல், சிலரால் பாவை விளக்கு, தேங்காய் விளக்கு, தாமரை பாலி விளக்கு, மயில் விளக்கு, சங்கு விளக்கு, பிள்ளையார் விளக்கு, துளசி மாட விளக்கு, பூச்செட்டி விளக்கு, அய்யப்ப தீப விளக்கு என பல விதங்களில் தயாரிக்கப்பட்டு, அதற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். கார்த்திகை தீப திருநாள் நெருங்கும் நிலையில், தலைநகரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள், சுற்றுவட்டார பகுதிகளில் தீப விளக்கு விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்து உள்ளது. - நமது நிருபர் -