பதிவு செய்த நாள்
04
டிச
2017
12:12
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் நேற்று காலை கார்த்திகை தேரோட்டமும், மாலை 6:15 மணிக்கு மலைமேல் கார்த்திகை மகா தீபமும் ஏற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர். இன்று தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. தேரோட்டத்தை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்க அங்கி அலங்காரத்தில், 16 கால் மண்டபம் அருகே சிறிய வைரத்தேரில் எழுந்தருளினர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க ரத வீதிகளில் தேரோட்டம் நடந்தது. கோயிலுக்குள் அனுக்ஞை விநாயகர் முன் மாலை 5:00 மணிக்கு யாகம் வளர்க்கப்பட்டு பூஜை, தீபாராதனை நடந்தது. அதே நேரத்தில் மலைமேல் தீப மண்டபம் அருகிலுள்ள உச்சி பிள்ளையார் முன் கும்பங்களில் புனிதநீர் நிரப்பி வைத்து, விநாயகர் பூஜை, அக்னிலிங்க பூஜை, வர்ண பூஜை, தீபாராதனை முடிந்து, தீப கொப்பரையில் புனிதநீர் தெளிக்கப்பட்டது.
கோயிலுக்குள் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்திய கிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள் சன்னதிகளில் பாலதீபம் ஏற்றப்பட்டது. கோயில் மணி அடிக்கப்பட்டதும், மலைமேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதைதொடர்ந்து, அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் மக்கள் தீபம் ஏற்ற திருப்பரங்குன்றமே ஜோதி வடிவாக காட்சியளித்தது. மூலவர் சுப்பிரமணிய சுவாமி முன் மூன்று முறை பாலதீபம் ஆரத்தி நடந்தது. இரவு தங்க மயில் வாகனத்தில்சுவாமி புறப்பாடாகி 16 கால் மண்டபம் முன் எழுந்தருளினர். அங்கு சொக்கப்பன் தீபக்காட்சி முடிந்து, சுவாமி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தார்.