பதிவு செய்த நாள்
15
டிச
2011
12:12
அரியலூர் : காமரசவல்லி ஸ்ரீகார்கோடேஸ்வரர் சிவன் கோயிலில், டிசம்பர் 17, 18ம் தேதியில் இரண்டு நாட்களும், ஸ்ரீ மகா ருத்ர ஹோமம் உள்ளிட்ட பல ஹோமங்கள் நடக்கின்றன.அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே காமரசவல்லி கிராமத்தில், பாலாம்பிகை சமேத ஸ்ரீ கார்கோடேஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. தஞ்சாவூர்-அரியலூர் மார்க்கத்தில், திருமானூரிலிருந்து ஏலாக்குறிச்சி வழியாக தூத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது காமரசவல்லி ஸ்ரீகார்கோடேஸ்வரர் சிவன் கோயில்.அரியலூர் மாவட்டத்தில் 7 கி.மீ., சுற்றளவுடன் மிகப்பெரிய பாசன ஏரியாக விளங்கும் சுக்கிரன் ஏரியின் தென்கிழக்கு கரையில் அமைந்துள்ள இக்கோயில், 45 கல்வெட்டுகள் கொண்ட திருநாவுக்கரசரின் வைப்பு தலங்களில் 70வது தலமாக போற்றப்படுகிறது.மகாபாரத காலத்துக்கு பிறகு, பாண்டவர்களில் ஒருவரான அர்ஜூனன் பேரன் பரிக்ஷத்து மகராஜா, ஒரு நாகம் தீண்டி இறந்து விடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் ஜனமேஜயன், நாக வம்சமே அழிய வேண்டும் என்பதற்காக, கால சர்ப்ப யாகம் செய்தார்.நாகங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக அதில் வந்து விழுந்து பொசுங்கியது. இதையடுத்து நாகங்களின் ராஜாவான கார்கோடகன், மகாவிஷ்ணுவின் கட்டளைபடி, காமரசவல்லி ரதிவரபுரம் எனப்படும் இத்தலத்துக்கு வந்து, நாக வம்சம் காப்பாற்றப்பட வேண்டும் என, இத்தலத்து இறைவனான சௌந்தரேஸ்வரரை வழிபட்டான்.அவனது பக்திக்கு இளகிய இறைவன், இங்கு வந்து வழிபடுவோருக்கு நாகதோஷம், கால சர்ப்ப தோஷம் அணுகாதிருக்க வேண்டும் என அருள் பாலித்ததுடன், இத்தலத்தில் வசிக்கும் யாரும் நாகம் தீண்டி இறக்காமல் இருக்க வேண்டும் எனவும், கார்கோடனிடம் உறுதி மொழி வாங்கி கொண்டு அவனது கோரிக்கையை நிறைவேற்றினார்.மேலும் அவனை தமது திருக்கழுத்தில் மாலையாக பரமசிவன் அணிந்து கொண்டார். பாம்பு வம்சமே பிழைத்திருக்க காரணமான இத்தலம், கடக ராசியில் பிறந்தோருக்கு சிறப்பு பரிகார தலம் எனவும் கூறப்படுகிறது.காமனை சிவபெருமான் தனது கண்ணால் எரித்த பின் ரதிதேவி, இத்தலத்துக்கு வந்து இங்குள்ள ஈசனையும் அம்பாளையும் மனமுருகி வேண்டி, தனது மாங்கல்ய பாக்யத்துக்காக வேண்டினாள்.அன்னை பாலாம்பிகையின் கருணையினால் காமன் மீண்டும் உயிர் பெற்று எழுந்த தலம் இந்த காமரசவல்லி. பிரிந்த தம்பதியினர் கூடவும், அவர்கள் மனமொன்றி குடும்பம் நடத்தவும், பெண்களின் மாங்கல்ய பலம் தழைக்கவும் சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது இக்கோவில்.உலக நன்மையை கருதியும், உலக மக்கள் யாவருக்கும் நாக தோஷம், கால சர்ப்ப தோஷம், சனி தோஷம் நீங்கும் பொருட்டும், வரும் 17, 18 தேதிகளில் கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், அகோராஸ்த்ர ஹோமம், மஹாம்ருத்யுஞ்ச ஹோமம், நாக தோஷ பரிகார ஹோமம், சுயம்வரா பார்வதி ஹோமம் இவைகளுடன், ஸ்ரீமகாருத்ர ஹோமம் நடத்தப்படுகிறது.கும்பகோணம் தினகர சர்மா தலைமையில் நடக்கவுள்ள மேற்கண்ட யாகங்களில் பங்கேற்போருக்கு, திருமண தடை, குழந்தை பேறு இன்மை, ஆண் வாரிசு இன்மை, பெண் வாரிசு இன்மை, தம்பதிக்குள் பிரிவினை, குடும்பத்தில் அகால மரணம், எதிர்பாராத விபத்து, மனதில் இனம் புரியாத பயத்தால் ஏற்படும் கவலை-விரக்தி, உத்யோக தடை, கல்வி அறிவு தடை, சொல்ல தெரியாத சொல்ல முடியாத வியாதிகள் போன்றவை நீங்க வாய்ப்பு ஏற்படும் என்பது ஐதீகம்.காமரசல்லி கிராமத்தில் வரும் 17 சனிக்கிழமை, 18 ஞாயிற்று கிழமைகளில் நடக்கும் யாகங்களின் போது, பொதுமக்கள் பலரும் பங்கேற்று இறை அருள் பெருமாறு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.