பதிவு செய்த நாள்
14
டிச
2017
12:12
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ராஜகோபுரம் கட்டும் பணிகள், ஒன்பது நிலைகள் முடிந்து, மீதமுள்ள பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு ஆகஸ்டிற்குள், ராஜகோபுரம் பணிகள் முழுமையாக நடந்து, கோவில் கும்பாபிஷேகம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாக, திருத்தணி முருகன் கோவில் விளங்குகிறது. இக்கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உட்பட பல்வேறு மாநில பக்தர்கள், வந்து செல்கின்றனர். தினமும், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து, மூலவரை தரிசிக்கின்றனர். இந்நிலையில், முருகன் கோவிலுக்கு, ராஜகோபுரம் அமைக்கும் பணி, 2009 நவ., 18ல், இந்து அறநிலைய துறை அனுமதியுடன் ஆரம்பிக்கப்பட்டது. 25 அடிக்கு அடித்தளம், 11 அடிக்கு கல்ஹாரம், 122 அடி உயரத்திற்கு, ஒன்பது நிலை ராஜகோபுரத்துக்கான அடிக்கல் நடப்பட்டது.
கடந்த, 2011க்குள் முடிக்க திட்டமிட்டிருந்த ராஜகோபுர பணிகள், பல்வேறு பிரச்னைகளால், கிடப்பில் போடப்பட்டன. ஏழு ஆண்டுகளுக்கு பின், ஏப்ரல்- - மே மாதத்தில் மீண்டும் ராஜகோபுர பணிகள் துவங்கின. ராஜகோபுர பணிகள், தற்போது துரித வேகத்தில் நடந்து வருகின்றன. தற்போது, ஒன்பது நிலை கோபுரங்கள் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. இது குறித்து, கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கல்ஹாரத்தின் மீது, ஒன்பது நிலை கோபுரங்கள் கட்டும் பணி, கடந்த மாதம் முடிவடைந்தது. தற்போது, ராஜகோபுரத்திற்கு வர்ணம் பூசும் பணியும் பொம்மைகள் அமைக்கும் பணியும் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. இப்பணிகளை, ஆறு மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு ஆகஸ்டிற்குள், ராஜகோபுரம் பணிகள் முழுமையாக நடந்து, கோவில் கும்பாபிஷேகம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.