தமிழகத்தின் முதல் எமன் கோவிலில் ஜன.22ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2017 04:12
தஞ்சாவூர்: தஞ்சை அருகே தமிழகத்தில் தனி சன்னதியாக இல்லமால், தனி கோவிலாகவே அமைந்துள்ள எமதர்மராஜன் கோவிலுக்கு வரும் ஜன.22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அமைந்துள்ளது திருச்சிற்றம்பலம் கிராமம். ஒரு முறை தேவர்கள், சிவபெருமானை வேண்டச்சென்ற போது, அவர் நிஷ்டையில் இருந்தார். அச்சமயத்தில் மன்மதனை வரவழைத்து சிவன் தவத்தை கலைத்தனர். இதனால் கோபம் கொண்ட சிவன், மன்மதனை அழித்தார். பின் ரதிதேவியின் வேண்டுதலுக்காக மன்மதனை உயிர்பித்தார். அப்போது எமதர்மன், சிவனிடம் தனக்கு அழிக்கும் பணி கொடுத்திருக்கும்போது, அதனை செய்ய தனக்கு உத்தரவிடும்படி வேண்டினார். சிவனும் அவருக்கு அருள்புரிந்தார். இதன் அடிப்படையில் பிற்காலத்தில் இவ்விடத்தில் எமதர்மனுக்கு கோவில் கட்டப்பட்டது. இவருக்கு அருள்செய்த சிவனுக்கு சற்று துாரத்தில் தனிக்கோவில் உள்ளது. இது குறித்து கிராமத்தினர் கூறியதாவது; உயிரை பறிக்கும் எமனுக்கும் ஒரு தனி கோவில் அமைத்து 1,300 ஆண்டுகளாக வழிபட்டு வருகிறோம். முதலில் மண்ணால் ஆன எமன் சிலையை வைத்து கிராமத்தினர் வழிப்பாடு நடத்தி வந்துள்ளனர். தற்போது 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக கோவிலை கட்டி எழுப்பியுள்ளோம். 2 டன் எடையுள்ள எமனின் கற்சிலையை வடிவமைத்து அமைக்கயுள்ளோம். இதன் உயரம் சுமார் 6 அடியாகும். ஜனவரி 22ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆயுள் நீடிக்க வேண்டிக்கொள்கிறார்கள். சனிக்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் இங்கு "ஆயுள்விருத்தி ஹோமம் செய்யப்படுகிறது. எனவே, சனிக்கிழமை எமகண்ட நேரத்தில் இவரை வழிபடுவது சிறப்பு என்கிறார்கள்.