பதிவு செய்த நாள்
20
டிச
2017
01:12
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்,புதிய உற்சவர் சிலை செய்ததில், முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து, பழைய உற்சவர் சிலையில் சிவன், அம்பாள் சிரசு சக்கரம் காணாமல் போனதை கண்டுபிடித்து தரக்கோரி, முன்னாள் அறங்காவலர் புகார் மனு அனுப்பியுள்ளார். காஞ்சிபுரத்தில், சிறப்பு பெற்று விளங்கும் ஏகாம்பரநாதர் கோவிலில், சோமாஸ்கந்தர் எனப்படும் பழைய உற்சவர் சிலை, 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
75 சதவீதம்: மன்னர் காலத்தில் செய்யப்பட்ட அந்த சிலையில், 75 சதவீதம் தங்கம் கலந்து, மிக நுட்பமான முறையில் நேர்த்தியாக செய்யப்பட்டது. அந்த சிலை சேதம் அடைந்துள்ளதாக கூறி, புதிய சிலை செய்ய, இரு ஆண்டுகளுக்கு முன்,கோவில் நிர்வாகம் முடிவு செய்தது; பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி, புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டு, கடந்த ஆண்டு பிரமோற்சவத்திற்கு பயன்படுத்தினர். புதிய உற்சவர் சிலையில், 5.45 கிலோ தங்கம் கலந்திருக்க வேண்டும்; அந்த அளவுக்கு சேர்க்கவில்லை என, கூறப்பட்டது. மேலும், புதிய சிலை செய்ய, பக்தர்கள் சார்பில் எவ்வளவு தங்கம் உபயமாக வழங்கப்பட்டது என்பதும், பக்தர்களுக்கு தெரிவிக்கவில்லை. அதனால், புதிய சிலை செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக பக்தர்கள் கருதினர். மேலும், திருவாச்சி எனப்படும், சிலைகளுக்கு பின்புற உலோக அமைப்பையும் காணவில்லை எனக் கூறி, காஞ்சிபுரத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்து, போலீசார் நடவடிக்கை எடுக்க, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிபதி, சமீபத்தில் உத்தரவிட்டார். இந்த வழக்கில்,சம்பந்தப்பட்ட தமிழக தலைமை ஸ்தபதி முத்தையா, கோவில் செயல் அலுவலர் உட்பட ஒன்பது பேர் மீது, சிவ காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின், அந்த வழக்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.
கடிதம்: இந்நிலையில், ஏகாம்பரநாதர் கோவில் முன்னாள் அறங்காவலர், ரகு என்ற வெங்கடேசன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஏகாம்பரநாதர் கோவில்,பழைய சோமாஸ்கந்தர் உற்சவர் சிலையில், சிவன் மற்றும் அம்பாள் சிலையில் இருந்த சிரசு சக்கரம் உடைந்துள்ளது.
அதை அதிகாரிகள் எடுத்து,பாதுகாப்பாக வைத்துள்ளனர் என, தலைமை ஸ்தபதி, 2015 ஆக., 4ல், அறநிலையத்துறை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த சிரசு சக்கரத்தை மீட்டு, அதன் எடை எவ்வளவு என்பதை,தலைமை ஸ்தபதி உறுதி செய்து, சிலையில் பொருத்த வேண்டும். பொருத்த இயலாது என்றால் பக்தர்கள் முன்னிலையில், ஆய்வு செய்து, கோவில் பெட்டகத்தில் உறுதி சான்றுடன் வைக்க வேண்டும்.
சிரசு சக்கரம் காணாமல் போனால், விசாரணை நடத்தி, அதில் குற்றம் காணப்பட்டால் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய உற்சவர் சிலை செய்ததில் ஏற்பட்ட பிரச்னை முடியும் முன், அதற்குள்,பழைய உற்சவர் சிலையில் உள்ள சிரசு சக்கரம் குறித்து புகார் எழுந்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மன்னர் காலத்தில் செய்யப்பட்ட ஏராளமான ஐம்பொன் சிலைகள், தங்க ஆபரணங்கள் முறையாக பாதுகாக்கப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. சுவாமிக்கு அணிவிக்கப்படும்தங்க ஆபரணங்களின், தற்போதைய நிலவரம் குறித்து, வெளிப்படையாக தெரிவித்தால், மேலும் சந்தேகங்கள் எழாமல் இருக்கும் என, பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.