பதிவு செய்த நாள்
22
டிச
2017
12:12
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், வரும், 31ம் தேதி திருப்படித் திருவிழாவும்,1ம் தேதி புத்தாண்டு தரிசனமும் நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலில், வரும், 31ம் தேதி திருப்படித் திருவிழா நடைபெறுகிறது. ஆண்டிற்கு, 365 நாட்கள் நினைவூட்டும் வகையில், திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு செல்லும் படிகளும், 365 அமைக்கப்பட்டுள்ளன. இதனால், ஆண்டுதோறும், டிச., 31ம் தேதி, முருகன் கோவிலில் திருப்படித் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விழாவின் போது பக்தர்கள், ஒவ்வொரு படிக்கும் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபடுவர். மேலும், 1,000க்கும் மேபட்ட பஜனை குழுவினர், பக்தி பாடல்கள் பாடிய வண்ணம் மலைக்கோவிலுக்கு சென்று, மூலவரை தரிசிப்பர். அந்த வகையில், வரும் 31ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, சரவணபொய்கை அருகே, முதல் படியில் சுவாமிநாதன் குருக்களால் பூஜை நடத்தி, முதல் பஜனை குழுவினரை வரவேற்று நிகழ்ச்சி துவங்கி வைக்கப்படும். தொடர்ந்து, காலை, 10:30 மணிக்கு, மலைக்கோவிலில் வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அன்று இரவு முழுவதும், மலைக்கோவில் மற்றும் திருத்தணி நகரம் முழுவதும் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறும். ஜன., 1ம் தேதி புத்தாண்டு தரிசனம் மற்றும் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.